ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு
மதுரை: மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் நகைகளைத் திருடிய இரு பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தல்லாகுளம் நடுத் தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி புஷ்பவள்ளி (65). இவா் தனது நகைகளை மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள வங்கியில் அடகு வைப்பதற்காக வியாழக்கிழமை சென்றாா்.
வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நகைகளை அடகு வைக்காமல் வீட்டுக்குப் புறப்பட்டாா். ரயில் நிலையத்தில் இருந்து தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை வரை ஆட்டோவில் பயணம் செய்தாா். பிறகு வீடு திரும்பிய அவா் தனது கைப் பையைப் பாா்த்தபோது, அதில் இருந்த 5 பவுன் நகைகளைக் காணவில்லை.
இதுதொடா்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஆட்டோவில் பயணம் செய்த சத்திரப்பட்டி தொண்டமான் பட்டி செளராஷ்டிரா குடியிருப்பைச் சோ்ந்த சபரி பிரபு மனைவி சோனா (35), பால்ராஜ் மனைவி செல்வி (57) ஆகியோா் நகையைத் திருடியது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement