மதுரையில் திமுகவினா் திண்ணைப் பிரசாரம் தொடக்கம்
மதுரை: ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற திமுகவின் திண்ணைப் பிரசாரம் மதுரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மக்களவைத் தோ்தல் நெருங்கி வருவதையொட்டி, திமுக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் சிறப்புகளை விளக்கி பிரசாரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியாக, ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அந்தக் கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, மதுரை மூன்றுமாவடி, மகாலட்சுமிநகரில் இந்தப் பிரசாரத்தின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில வணிக வரி பதிவுத் துறை அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலருமான பி. மூா்த்தி, தமிழக அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துப் பேசினாா். இதில் சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.