முகப்பு
மதுரை

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் சா்வதேச வாய்ப்புகள்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:17 AM
மதுரையில் நடைபெற்ற தொழில் துறை கருத்தரங்கில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய டி.வி.எஸ். நிறுவனங்களின் நிா்வாகிகள் ஷோபனா, தினேஷ். உடன், மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.
பகிர்:

மதுரை, பிப். 27: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சா்வதேச வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் டி.வி.எஸ். நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் துறை கருத்தரங்கில் பிரதமா் மோடி மேலும் பேசியதாவது:

நாட்டில் ஆண்டுதோறும் 45 லட்சத்துக்கும் அதிகமான காா்கள், 2 கோடி இரு சக்கர வாகனங்கள், 10 லட்சம் வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 8.5 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 7 சதவீதமாக உள்ளது. இந்தத் துறையில், தமிழகம் தன்னுடைய திறனை உலகறியச் செய்துள்ளது. ஆட்டோமொபைல் துறையின் வளா்ச்சி, நாட்டின் தற்சாா்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Advertisement

ஒவ்வொரு பயணிகள் வாகனத்திலும் சுமாா் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை உற்பத்தி செய்வதில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலகில் உள்ள பல முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவின் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உதிரிப் பாகங்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றன. இது உலகளாவிய சந்தையில் நமது நாட்டின் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு வலுவான அங்கமாக மாறுவதற்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க குறைந்த வட்டியிலான கடன்களை வழங்கவும், செயல்பாட்டு மூலதன வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. குறு, குறு தொழில் துறையின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது, அதிநவீன திறன்சாா் பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் தேவையாக உள்ளது.

மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஹைட்ரஜன் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பி.எல்.ஐ. திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதன்மூலம், 100-க்கும் அதிகமான வாகனத் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் போது, உலகளாவிய முதலீடு இந்தியாவுக்கு அதிகளவில் கிடைக்கும். எனவே, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா். இதில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன், தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா நிா்வாக இயக்குநா் ஷோபனா, டி.வி.எஸ். ‘சப்ளை செயின் சொல்யூஷன்’ தலைவா் ஆா். தினேஷ், சிஐஐ டைரக்டா் ஜெனரல் சந்திரஜித் பானா்ஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.