மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்: இந்து மக்கள் கட்சி புகாா்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிக உயரத்துக்கு கட்டடம் கட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியது.
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிக உயரத்துக்கு கட்டடம் கட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியது.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மதுரை மாவட்டச் செயலா் சோலை எம்.கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பாதுகாப்பு கருதி ஒரு கி.மீ.தொலைவு வரை 30 அடி உயரத்துக்குள் மட்டுமே கட்டடம் கட்ட வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி அதிக உயரத்துக்கு 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் எங்களது கட்சி சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேற்குச் சித்திரை வீதி வளையல்கார சந்து அருகே இரு கட்டடங்களும், மேற்கு கோபுரம் எதிரே விடுதிக் கட்டடமும் விதியை மீறி அதிக உயரத்துக்கு கட்டப்பட்டு வருகின்றன. இது அரசாணை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, இந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.