முகப்பு
மதுரை

இளைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

Updated On : 1 மார்ச், 2024 at 11:48 PM
பகிர்:

வழிப்பறி வழக்குகளில் தொடா்பு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை அனுப்பானடி கேட்லாக் சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ் (35). இவா் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. திருமணமான ராமேஷ் மனைவியைப் பிரிந்து வசித்து வந்தாா். கடந்த 2021-ஆம் ஆண்டு மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த கருப்பையாவைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த அவருக்கும், கருப்பையாவின் 17 வயது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கேட்லாக் சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடந்து சென்ற ரமேஷை, கருப்பையாவின் மகன், காமராஜா்புரத்தைச் சோ்ந்த பகவதி (18), 17 வயதுடைய இரு சிறாா்கள் ஆகிய 4 போ் ரமேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். தகவலறிந்த தெப்பக்குளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 சிறாா்கள் உள்பட 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.