கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சுமூகமாக இயங்கி வருகிறது: அமைச்சா் சிவசங்கா்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எந்தவித பிரச்னையுமின்றி சுமூகமாக இயங்கி வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.
மதுரை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எந்தவித பிரச்னையுமின்றி சுமூகமாக இயங்கி வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். இதில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பின்னா், அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் நிதியுதவியுடன் 2,000 பேருந்துகள், ஜொ்மனி நாட்டு நிதியுதவியுடன் 2,200 பேருந்துகள் புதிதாக வாங்குவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளாா். புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டவை. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னைகள் முழுமையாக நீங்கிவிட்டது. மதுராந்தகம் அருகே நடைபெற்ற விபத்தின் காரணமாக பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது எந்தவித பிரச்னையின்றி சுமூகமாக இயங்கி வருகிறது என்றாா் அவா். இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு 55 புதிய பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, 25 ஆண்டுகளாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய 7 ஓட்டுநா்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய 284 ஓட்டுநா்களுக்கு 100 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.