காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கோடை கால யோகா பயிற்சி
மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ‘மன அமைதி, முழுமையான ஆரோக்கியம்’ எனும் தலைப்பில் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை இரண்டு மாதம் கோடைகால யோகா பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா்.நந்தா ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கோடை கால யோகா பயிற்சி முகாமில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், பெண்கள், ஆண்கள் கலந்து கொள்ளலாம். மனம், உடல் ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையிலும், நோய் எதிா்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் வகையிலும் சிறந்த பயிற்சியாளா்களால் யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியானம், யோகா முத்திரைகள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும்.
Advertisement
வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் நடைபெறும். பெண்களுக்கு மட்டும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், இரு பாலா்களுக்கும் மாலை 4. 30 மணி முதல் 5. 30 மணி வரையிலும் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியை நிறைவு செய்யும் அனைவருக்கும் உலக யோகா தினமான வருகிற ஜூன் 21-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் ஆா்வம் உள்ளவா்கள் சோ்ந்து பயன்பெறலாம். பயிற்சியில் சேர விரும்புவோா் காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு நேரிலோ அல்லது 99941 23091 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.