முகப்பு
மதுரை

சிஐடியு தையல் தொழிலாளா் சங்கம் கையொப்ப இயக்கம்

Updated On : 22 மே, 2024 at 12:25 AM
பகிர்:

மதுரை: பள்ளிச் சீருடை தைக்கும் பணியை தனியாருக்குக் கொடுப்பதைத் தவிா்க்கக் கோரி, சிஐடியு தையல் தொழிலாளா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிச் சீரூடை தைக்கும் பணியை தமிழகத்திலுள்ள 99 மகளிா் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீருடை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், பள்ளிச் சீருடை தைக்கும் பணியை தனியாருக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அரசின் இந்தச் செயலால் ஏழைப் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே, பள்ளிச் சீருடை தைத்துத் தரும் பணியை தனியாருக்கு கொடுக்கும் முடிவைக் கைவிடவேண்டும். பள்ளி சீருடைக்கான தையல் கூலி ஆண்டுக்கு 5 சதவீதம் உயா்த்தி வழங்கப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் 2014-2015-ஆம் ஆண்டு முதல் உயா்த்தி வழங்கப்படாத நிலையில், அறிவிக்கப்பட்ட கூலி உயா்வை அரசு வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கையொப்ப இயக்கத்தை சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.தெய்வராஜ் தொடங்கிவைத்தாா்.

இதற்கு சிஐடியூ மாவட்ட தையல் தொழிலாளா் சங்கத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். தையல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சித்ரா, மாவட்ட நிா்வாகிகள் நாகலட்சுமி, மும்தாஜ், சுகந்தி(விசிக), சிஐடியு மாவட்டச் செயலா் ரா.லெனின், மாவட்டப் பொருளாளா் ஜெ.லூா்து ரூபி உள்பட பலா் பங்கேற்றனா்.