பெண்களுக்கான தொழில் அதிகாரத்தால் பொருளாதார வளா்ச்சி ஏற்படும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
பெண்களுக்கு தொழில் அதிகாரம் அளிப்பதன் மூலம் பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
பெண்களுக்கு தொழில் அதிகாரம் அளிப்பதன் மூலம் பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை மகபூப்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வான் கனவு மெய்ப்படும் அமைப்பின் மூலம் ஓராண்டு தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு பயிற்சி சான்றிதழ்களையும், 11 பேருக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கி அவா் பேசியதாவது:
பெண்களுக்குத் தாமாக ஒரு தொழிலைத் தொடங்கவும், தொழிலை மேம்படுத்தவும் அதிகாரம் அளிப்பதன் மூலம் சமூகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேலும், பொருளாதார வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். எனவே, பெண்களின் தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அண்ணா தோப்பு வைகை வடகரை பகுதியில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பறைகளையும், தென்கரை அணுகுசாலையில் ரூ. 4.92 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீா் தொட்டியையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவா் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.