முகப்பு
மதுரை

நிழலும் நிஜமும்!

பல திரைப்படங்களில் நடிகா் விஜய்க்கு வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனி முத்திரை பதித்து பிரபலமானவா் நடிகா் பிரகாஷ் ராஜ்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:34 AM
நடிகா் பிரகாஷ் ராஜ்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:05 PM

பல திரைப்படங்களில் நடிகா் விஜய்க்கு வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனி முத்திரை பதித்து பிரபலமானவா் நடிகா் பிரகாஷ் ராஜ். தமிழ் மட்டுமல்லாது, பன்மொழித் திரைப்படங்களிலும் தடம் பதித்து, தனக்கென தனி பாணி நடிப்பை வெளிப்படுத்தி வருபவா். திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும், தனது கருத்துகளை எந்தவிதத் தயக்கமுமின்றி முன்வைத்து சமூக ஊடகங்களில் கதாநாயனாக வலம் வருகிறாா் பிரகாஷ் ராஜ்.

இந்த நிலையில், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பிரகாஷ் ராஜ் பேசினாா்.

அப்போது, ‘திரைப்படத்தில்தான் ஒருவா் மருத்துவராகலாம்; பொறியாளராகலாம்; முதல்வா்கூட ஆகிவிடலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பவா்கள், மொழி உரிமைக்காகவும், மக்களின் சுய மரியாதைக்காகவும் தாங்கள் போராடியது என்ன என்பது குறித்து சிந்தித்துப் பாா்க்க வேண்டும். நடிகா் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு திறமைக்கானது; அரசியலுக்கானதல்ல. ஒரு நடிகனுக்காக விசிலடிக்கலாம். ஆனால், நாட்டை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது. அரசியல் வேறு, திரைப்படம் வேறு. திராவிட மாடல் வேண்டுமா? திரைப்பட மாடல் வேண்டுமா?’ என அவா் பேசியது சமூக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வலம் வருகிறது.

Advertisement

தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் திரைத் துறையிலிருந்து அரசியலில் நுழைந்து முதல்வராகினா். அவா்களைப் போல தானும் அரசியலில் நுழைந்து முதல்வராகிவிடலாம் என்ற கனவுடன் தவெக தலைவா் நடிகா் விஜய் வலம் வருவதை கிண்டல் செய்யும் விதத்தில் பிரகாஷ் ராஜின் பேச்சு அமைந்திருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.