கடவுள் நம்பிக்கையில்லை; ஆனால்... பிரகாஷ் ராஜ் பதிலுக்குப் பெருகும் ஆதரவு!
மதம், நம்பிக்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ் குறித்து...
நடிகர் பிரகாஷ் ராஜ் மீது சமீபத்தில் மத ரீதியான விமர்சனங்கள் எழுந்ததுக்கு பதிலளித்துள்ளார். இந்தப் பதிலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில், நடிகர் பிரகாஷ் ராஜின் அன்னை சுவர்ணலதா (86 வயது) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் காலமானார். அவரது அன்னையின் விருப்பப்படி பிரகாஷ் ராஜ் கிறிஸ்தவ முறையின்படி சடங்கு செய்தார்.
பிரகாஷ் ராஜ் பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அற்றவர். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி இதுகுறித்து பதிவிட்டு வருவார். இப்படியான நிலையில், அவர் தனது அம்மாவிற்காக செய்த செயலை சிலர் விமர்சித்து கேலி செய்து வந்தனர்.
சோட்டா டான் மற்றும் தி ஜெய்பூர் டயலாக்ஸ் எனும் பக்கத்தில், “நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எனக் கூறுகிறார். ஆனால், கிறிஸ்தவ முறைப்படி அவரது அம்மாவுக்கு சடங்கு செய்கிறார்” என கேலி செய்து விடியோ வெளியிட்டிருந்தது.
பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இதனைப் பகிர்ந்து , “ஆமாம். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அவரது நம்பிக்கை மறுக்க நான் யார்? அவரது நம்பிக்கையின் படி புதைக்க உரிமை இருக்கிறது. மற்றவருக்கு நாம் அளிக்க வேண்டிய அடிப்படை மரியாதை இதுதான். இதெல்லாம் மத ரீதியான தாக்குதல் நடத்துபவர்களுக்குப் புரியுமா? எனப் பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்தப் பதிவினை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.