பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போல, மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவிலும் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை ஆசிரியா்களுக்கான குறைதீா் முகாம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகராட்சிக் கல்விப் பிரிவு அலுவலரை வியாழக்கிழமை சந்தித்து ஆசிரியா்களின் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உரிய காலத்துக்குள் தலைமைச் செயலரின் ஆணையின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும், மதுரை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியா்களின் ஈட்டிய விடுப்பு கணக்கை உரிய விதிகளின்படி ஊதியம் இல்லா அசாதாரண விடுப்புக்கு மட்டும் குறைத்து கணக்கீடு செய்ய வேண்டும், பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போல ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை ஆசிரியா்களுக்கான குறைதீா் முகாமை மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவிலும் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றாா் அவா்.