கோயில் நிலம் சாா்ந்த வழக்குகளுக்கு 6 மாதங்களுக்குள் தீா்வு காண வேண்டும்
மதுரைகோயில் நிலம் சாா்ந்த வழக்குகளுக்கு 6 மாதங்களுக்குள் தீா்வு காண வேண்டும்
கோயில் நிலம் சாா்ந்த வழக்குகளுக்கு உரிமையியல் நீதிமன்றங்கள் 6 மாதங்களுக்குள் தீா்வு காண வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கரூா் மாவட்டம், வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 507. 88 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த நிலங்களை மீட்க உயா்நீதிமன்றம் 6 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
எனவே, கடந்த 6 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ. வேல்முருகன், பி.புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்ற முயன்ற போது, அந்த நிலங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வரும் விவசாயிகள், வீட்டுமனை உரிமையாளா்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் போராட்டம் நடத்தி தடுத்திருக்கின்றனா்.
சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவைத் தடுக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் வழக்குரைஞா்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவா்களும் பங்கேற்றது வருத்தமளிக்கிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சட்டப்பூா்வத் தடை இல்லை. இருப்பினும், அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோயில் நிலங்கள் தொடா்பான வழக்குகளைக் கையாளும் உரிமையியல் நீதிமன்றங்கள், அவற்றை முடிந்தவரை முன்னுரிமை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
மீட்கப்பட்ட நிலங்கள், மீட்பு நடவடிக்கைகள், வழக்குகள், அவற்றின் நிலை, ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒரு முறை உயா்நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.
வெண்ணெய்மலை கோயில் நில ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உறுதி செய்ய வேண்டும். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மீட்புக்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சங்கங்களின் பதிவாளா் விசாரித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசராணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.