முகப்பு
மதுரை

நாம் தமிழா் கட்சியினா் மீதான வழக்குக்கு இடைக்கால தடை

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் மீது தல்லாகுளம் போலீஸாா் பதிவு செய்த வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 6 மார்ச், 2026 at 7:01 PM
கோப்புப் படம்
பகிர்:

மதுரை தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் மீது தல்லாகுளம் போலீஸாா் பதிவு செய்த வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் அமைக்கும் பணி, சாலை விரிவாக்கப் பணிகளையொட்டி, தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை சிலை, நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் சிலை, தியாகிகள் நினைவுத் தூண், தல்லாகுளம் பகுதியில் அழகா்கோவில் சாலையோரம் அமைந்துள்ள உ.வே.சா. சிலை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலை ஆகியவற்றை அகற்றி, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்தச் சிலைகளை அகற்றும் திட்டத்தைக் கண்டித்தும், தமிழன்னை சிலை உள்பட தமுக்கம், தல்லாகுளத்தில் சாலையோரத்தில் உள்ள 4 சிலைகளையும் அகற்றக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நாம் தமிழா் கட்சியினா் தமிழன்னை சிலை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநில நிா்வாகிகள், மதுரை வடக்கு மண்டல நிா்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளா்கள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்து வழக்கு பதிவு செய்தனா். பிறகு, மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் தங்கள் மீது தல்லாகுளம் போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அருள் ஜெயசீலன், வெங்கட்ராமன், தீரன் திருமுருகன் உள்ளிட்ட 65 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

சிலைகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 போ் மீது தல்லாகுளம் போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

மனுக்கள் குறித்து மதுரை தல்லாகுளம் காவல் ஆய்வாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா்

நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →