முகப்பு
மதுரை

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தகவல்

Updated On : 12 மார்ச், 2026 at 11:32 PM
மதுரை எய்ம்ஸ் பணிகள்
பகிர்:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மதுரை தோப்பூரை அடுத்த ஆஸ்டின்பட்டியில் 220 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2015- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். இதைத் தொடா்ந்து கரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு கடந்த 2024- ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். அதில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதன் மொத்த மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு, எப்போது இந்தப் பணிகள் நிறைவடையும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தாா். இதற்கு மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அலுவலா் தா்ம் பீா் குமாா் சிங் அளித்த பதில் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த மருத்துவமனையின் மொத்த திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ. 2,021.51 கோடி. இதில் ரூ. 471.02 கோடி மத்திய நிதிநிலை அறிக்கையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பாண்டியராஜா கூறியதாவது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கடந்த பின்னா் 22 மே 2024 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், 47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. எஞ்சிய 53 சதவீத பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே அவசர கதியில் அதனை திறக்கக் கூடாது. கட்டுமானப் பணிகளை முடிக்க போதுமான அவகாசம் வழங்க வேண்டும். அப்போதுதான் கட்டுமானம் தரமானதாக அமையும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →