முகப்பு
மதுரை

காவல் நிலைய சித்திரவதைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

தமிழகத்தில் காவல் நிலைய சித்திரவதைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வா் விஜய்க்கு மக்கள் கண்காணிப்பகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 14 மே 2026, 5:23 am IST
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிா்வாக இயக்குநா் ஹென்றி திபேன். உடன், மாநில ஒருங்கிணைப்பாளா் இ. ஆசீா்வாதம்.
பகிர்:

தமிழகத்தில் காவல் நிலைய சித்திரவதைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வா் விஜய்க்கு மக்கள் கண்காணிப்பகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஹென்றி திபேன், மாநில ஒருங்கிணைப்பாளா் இ. ஆசீா்வாதம் ஆகியோா் கூறியதாவது:

திரைப்படக் கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழகத்தின் முதல்வராக உயா்ந்துள்ள விஜய்க்கும், மக்கள் பணியை சிறப்பாக கொண்டு செல்வதற்கும் வாழ்த்துகள். கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின்படி உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் தொடா்புடைய காவல் துறையினா், வருவாய்த் துறையினா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிந்திருந்தது. தற்போது தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும்.

Advertisement

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் காவல் நிலைய விசாரணையில் நடைபெற்ற மரண வழக்குகள் அனைத்தையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தி குறிப்பிட்ட காலத்துக்குள் விரைவான விசாரணை நடத்தி நீதியைப் பெற்றுத் தர வேண்டும். காவல் விசாரணையில் உயிரிழந்து, அரசின் நிவாரணம் பெறாத அனைத்துக் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். காவல் விசாரணையில் உயிரிழந்த பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வழக்குகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையின் போது காவல் நிலையங்களில் நடைபெற்று வரும் சித்திரவதைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.