இலங்கை கடற்படை சிறைப் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கை கடற்படை சிறைப் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரியும், ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் சனிக்கிழமை தமிழர் தேசிய முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில பொதுச் செயலர் கண்.இளங்கோ தலைமை வகித்தார்.
இதை தொடக்கி வைத்து பழ.நெடுமாறன் பேசியது: பிரதமர் நரேந்திரமோடி புதுதில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை தொடர்ந்து 30 நாள்களுக்கு மேலாகியும் சந்திக்க மறுப்பது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயலாகும். இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விரைவில் இலங்கை செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு வசிக்கும் தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்டு அதை நீக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவர் அய்யநாதன், பொதுச் செயலர் பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மனாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் ரீஜன் வரவேற்றார். இதில் ராமநாதபுரம் பெரியார் பேரவைத் தலைவர் நாகேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.