திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட சின்ன தொண்டியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மதுபானக் கடை திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சின்னதொண்டி கிராமத்தில் சில நாள்களுக்கு முன் அரசு மதுபானக் கடை திறக்க முற்பட்டபோது, இப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆனால், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மீண்டும் அதே இடத்தில் அரசு மதுபானக் கடை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தக் கடை அருகே மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, அரசு தொடக்கப் பள்ளி, நியாயவிலைக் கடை, பெண்கள் குளிக்கும் ஊருணி, குடியிருப்பு பகுதி உள்ளிட்டவை உள்ளன. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து மதுபானக் கடையை திறக்கக் கூடாது என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.