ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதன்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி கட்டிப்போட்டு 50 பவுன் நகைகளை கொள்ளயடித்துச் சென்றுள்ளனர்.
கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர் சிறைமீட்டான் (68). அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி மங்கையர்க்கரசி (56). மானாமதுரை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கமுதி-மதுரை சாலையில் உள்ள தோட்ட வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 6 மணியளவில், வீட்டை விட்டு சிறைமீட்டான் வெளியே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரைத் தாக்கி மரத்தில் கட்டிவைத்தனர். மேலும் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியின் கைகளைக் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். பின்னர் பீரோ சாவியை வாங்கி பீரோவில் இருந்த நகை, பணத்தையும் எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
பின்னர் அக்கம்பத்தினர் உதவியுடன் தம்பதி இருவரும் கட்டுக்களை அவிழ்த்து இயல்பு நிலைக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளயடிக்கப்பட்டுள்ளதாக கமுதி காவல்நிலையத்தில் சிறைமீட்டான் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.