முகப்பு
ராமநாதபுரம்

காவல்துறை செயல்பாடுகள்: பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவல்துறை செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவல்துறை செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 பரமக்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் பி.கருப்பையா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. காவல் நிலையங்களில் துப்பாக்கி வைப்பறைகள், விசாரணை கைதிகளை வைத்திருக்கும் அறைகள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துணைக்கண்காணிப்பாளர் கூறுகையில், பெற்றோர்கள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி சிரமப்பட்டால் அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது.  பாலியல் குற்றத்தை தடுக்க காவல்துறைக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும்.  மது, கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது. சாலை போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் குறித்து விளக்கிப் பேசினார். இம்முகாமில் நகர் காவல் ஆய்வாளர் பொன்ராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மோகன்குமார், தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 மாலையில் தனியார் மஹாலில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கந்து வட்டி தடுப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் நகர் முக்கிய பிரமுகர்கள், சமுதாயத்தலைவர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களிடத்திலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →