முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்கள்: இணையவழியில் வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் வசதி

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் புதிய வசதி அறிமுகம்.

Updated On : 17 மார்ச், 2026 at 9:59 PM
2 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
பகிர்:

நமது நிருபர்

தமிழகம், புதுச்சேரி, 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 8 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வலைதளம், கைப்பேசி செயலி என "எண்ம' முறையில் தாக்கல் செய்யும் கூடுதல் வசதிகளும் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகம், கேரளம் உள்பட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளர்ளுக்கு உகந்த வகையில் பல்வேறு வசதிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

பொதுவாக தேர்தல்களின்போது வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேரில் சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இத்துடன், இணையவழியிலும், செயலி வழியிலும் வேட்புமனு தாக்கலுக்கான கூடுதல் வசதியையும் தேர்தல் ஆணையம் அளித்து வருகிறது.

வேட்புமனுக்களை கைப்பேசி செயலி மூலம் தாக்கல் செய்யும் வகையில் சுவிதா வேட்பாளர் செயலி உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன் பின்னர் சுவிதா செயலி 2.0 என அச்செயலியில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு பயனர் பயன்படுத்துவதற்கு எளிதான வகையில் பல்வேறு அம்சங்களுடன் 2024-இல் மேம்படுத்தப்பட்டது.

அண்மையில் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு செயலிகளை ஒன்றாகக் கிடைக்கச் செய்யும் வகையில் தொடங்கப்பட்ட இசிஐநெட் இணையதளத்தில் இந்த சுவிதா செயலி 2.0 சேர்க்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இணையவழி (ஆன்லைன்) முறையைப் பயன்படுத்தும் கூடுதல் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான வேட்புமனு படிவம் https://suvidha.eci.gov.in என்ற வலைதளத்திலும் கிடைக்கும்.

ஒரு கணக்கை உருவாக்குவதன் மூலம், வேட்பாளர்கள் வேட்புமனுப் படிவத்தை நிரப்பலாம். வைப்புத்தொகையைச் செலுத்தலாம், நேர ஒதுக்கீடுகள் (டைம் ஸ்லாட்ஸ்) உள்ளனவா எனச் சரிபார்க்கலாம். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரைச் சந்திப்பதற்கான தங்கள் வருகையைத் தகுந்தவாறு திட்டமிடலாம்.

போட்டியிட விரும்பும் எந்தவொரு வேட்பாளரும் இதனை இணையவழியில் நிரப்பி, படிவம் 1-இல் (தேர்தல் நடத்தை விதிகள், 1961இன் விதி3) குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிப்பதற்காக அதன் அச்சுப்பிரதியை எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோன்று, பிரமாணப் பத்திரத்தையும் இணையவழியில் நிரப்பலாம். அது நிரப்பப்பட்டதும், வேட்பாளர் அதன் அச்சுப்பிரதியை எடுத்து, அதனை ஒரு நோட்டரி வழக்குரைஞரிடம் சான்றொப்பம் பெற்று, வேட்புமனுப் படிவத்துடன் சேர்த்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் தனது வைப்புத்தொகையை, அதற்கென ஒதுக்கப்பட்ட தளத்தின் வாயிலாக இணையவழி முறையில் செலுத்தலாம்.

இருப்பினும், கருவூலத்தில் நேரடியாகப் பணமாகச் செலுத்தும் வாய்ப்பும் வேட்பாளருக்குத் தொடர்ந்து இருக்கும். வேட்புமனுத் தாக்கல் செய்யும் நோக்கத்திற்காக, தனது வாக்காளர் பதிவுச் சான்றிதழைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வேட்பாளர் இணையவழியில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

summary

The Election Commission of India has introduced a new facility for filing nominations online for the upcoming Tamil Nadu Assembly elections.

முழு கட்டுரையைப் படிக்க →