முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!
முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நான்கு முதல்வர் வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளே முதல்வர் வேட்பாளர்களான திமுக மு.க. ஸ்டாலின் கொளத்தூரில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Advertisement
தவெக தலைவர் இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், ஏப். 2 ஆம் தேதி திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 234 தொகுதிகளில் 7,000-க்கும் மேற்பட்டோர் போட்டியிட வேட்புமனு அளித்திருந்தனர்.
அனைத்து வேட்புமனுக்களையும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இன்று காலை முதல் பரிசீலனை செய்து வருகின்றனர்.
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின், எடப்பாடியில் எடப்பாடி கே. பழனிசாமி, காரைக்குடியில் சீமான் மற்றும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்யின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக எதிர்க்கட்சிகள் புகாரைத் தொடர்ந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.