கமுதக்குடி கிராமச் சாலையை சீரமைக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட கமுதக்குடி கிராமத்துக்குச் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட கமுதக்குடி கிராமத்துக்குச் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதக்குடி ரயில்வே கடவுப் பாதைப் பகுதியில் என்டைஸ் நூற்பாலையும், நியாயவிலைக் கடைகளுக்கு தேவையான அரிசியை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு மற்றும் அரசு சிமென்ட் சேமிப்பு கிடங்கும் உள்ளன. இங்கு, பரமக்குடி நகர் மற்றும் பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்பாலை மற்றும் சேமிப்புக் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
கிராமப் பகுதியிலிருந்து பணிக்கு வரும் பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும், வாடகை வேன்கள் மற்றும் சிற்றுந்துகளிலும் கமுதக்குடி கிராமச்சாலை வழியாக வந்து செல்கின்றனர். மேலும், சேமிப்புக் கிடங்கில் அரிசி மூட்டைகளை இறக்கி வைக்கவும், ஏற்றிச்செல்லவும் நாள்தோறும் லாரிகள் அதிக அளவில் வந்துசெல்கின்றன. அக் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் இச்சாலை வழியாகவே செல்ல வேண்டும்.
இந்நிலையில், இச்சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும், வாகனங்கள் பழுதாகி சாலைகளில் நிற்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை மற்றும் கிராமப்புற சாலை மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
அதிக பயன்பாட்டிலுள்ள இச்சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.