ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வரவில்லையெனில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் வருகைப் பதிவேட்டினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறியது:
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், நவீன மருத்துவ வசதிகளுடன் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்குகின்றன. மேலும், தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் வகையில் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிக்கு கட்டாயம் பணியில் இருக்கவேண்டும். அதேபோல், டயாலிசிஸ் பரிசோதனையை காலை 8 மணிக்குள் முடித்து விடவேண்டும் எனவும் அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்கினார். காலதாமதமாக வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
பின்னர், அரசு மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது, அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், மருத்துவர்கள் விநாயகமூர்த்தி, சிவானந்த வள்ளி, மலையரசு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.