பரமக்குடி அருகே குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது புகார்
பரமக்குடி அருகே உள்ள பா.இலந்தைக்குளம் கிராமத்தில், குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
பரமக்குடி அருகே உள்ள பா.இலந்தைக்குளம் கிராமத்தில், குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சார்-ஆட்சியர் பி. விஷ்ணுசந்திரனிடம் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்டுள்ள பா.இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி ராஜாமணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது குடும்பம் மற்றும் எனது மூத்த சகோதரி முத்துலெட்சுமி, தம்பி ராஜரெத்தினம் ஆகியோர் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை முடிக்கும் நோக்கில், கிராமத்திலுள்ள கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வதாக, பரமக்குடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அக்கிராமத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்துவரும் சிவனு மகன் பாண்டி, சண்முகம் மகன் மனோகரன், கணேசன் மகன் முருகன், பெரியகண்ணன் மகன் கருப்பையா, சித்திரவேல் மகன் சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து, ஊர் மக்களை மிரட்டி பாலில் சத்தியம் வாங்கி, யாரும் எங்கள் குடும்த்துடன் பேசக்கூடாது எனக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து, கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் மனித உரிமை மீறும் செயல்களில் ஈடுபட்டு, எங்களது குடும்பத்துக்கு தொந்தரவு அளித்து வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.