"ராமேசுவரம் மீனவர் பிரச்னையை பொறுமையோடு கேட்காதவர் கமல்'
ராமேசுவரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்று விட்டார் கமல் என பாஜக.தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
ராமேசுவரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்று விட்டார் கமல் என பாஜக.தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஒப்பந்தத்தை திமுக ஆட்சியில் இருந்த போது புதுப்பிக்காமல் விட்டு விட்டது. அது மட்டும் அல்லாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது அந்த வழக்கை வாபஸ் பெற்றதும் திமுகவாகும். இவையிரண்டும் நடந்த போது வைகோ திமுக சார்பில் மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இப்போது மத்திய அரசை குறை கூறுகின்றனர். உண்மையில் காவிரி பிரச்னையில் மத்திய அரசு எந்தத் தவறும் செய்ய வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கமல் ஏற்கனவே இந்துக்களை கேலி செய்தவர். இந்து விரோதியாக அறியப்பட்டவர். விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு அடிபணிந்தவர். ராமேசுவரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்று விட்டார்.
ராமேசுவரத்தில் அப்துல்கலாம் வீட்டுக்கு சென்றவர் அங்கு இருக்கும் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்ல அவருக்கு நேரமில்லை. மேலும் தில்லி முதல்வர் கேஜரிவாலை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே பரமக்குடி, மானாமதுரை மக்களை ஏமாற்றிவிட்டு சென்று விட்டார். இருப்பினும் அவர் புதிதாக கட்சி தொடங்கியமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அப்போது பாஜக. மாவட்ட தலைவர் கே.முரளீதரன், மாவட்டச் செயலர்கள் குமார், ஆத்ம கார்த்திக், நகர் தலைவர் பாபு உள்ளிட்ட பலர் இருந்தனர்.