கமுதி அருகே பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படும் பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் கோவிலாங்குளம் சாலையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில், 2001-இல், கழிப்பறை, குளியலறைகள் மற்றும் ஆழ்துளை கிணறு வசதியுடன் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகள் முறையான பராமரிப்பும், தண்ணீர் வசதியும் இருந்ததால், அதை பொதுமக்கள் பயன்படுத்தினர்.
இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றில் நீரூற்றுக்கள் குறைந்ததால், தண்ணீரின்றி இந்த பொது சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதையடுத்து பராமரிப்பு செய்யாததால் அப்பகுதி முழுவதும் முள்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுவதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொந்தம்புளி ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.