முதுகுளத்தூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக, பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் 46 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு, 31 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 39 தலையாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், 15 கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால், மற்ற பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதலாக பணியாற்றி வந்தனர். ஆனால், அதற்குரிய ஊதியம் வழங்காததைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலக மாநிலச் சங்கத் தீர்மானத்தின்படி, கூடுதல் பொறுப்பு கிராமங்களின் கணக்குகளை வாட்டாட்சியரிடம் ஒப்படைத்துவிட்டனர்.
முதுகுளத்தூர் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடம் காலியாக உள்ளன. இந்நிலையில், தற்போது விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருவதால், கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாத கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியது: புல்வாய்க்குளம், ஏனாதி, சித்திரங்குடி, கீழச்சிறுபோது, இளஞ்செம்பூர் உள்ளிட்ட கிராம மக்கள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக, விவசாயிகள் தினமும் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று காத்து கிடப்பதாகவும் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.