ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன், வலைகளை அறுத்தெறிந்து விரட்டியடித்ததாக, செவ்வாய்க்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
டீசல் விலை உயர்வு, மானியத்தை உயர்த்தி வழங்கவேண்டும், இலங்கையில் சேதமடைந்துள்ள விசைப் படகுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடந்த 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்ற இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தீபாவளி உள்ளிட்ட திருவிழாக்கள் வருவதையொட்டியும், வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர்.
இவர்கள், செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் 7 ரோந்து கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந்து, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பல ஆயிரம் ரூபாய் நஷ்டத்துடன் செவ்வாய்க்கிழமை கரை திரும்பினர்.