சாயல்குடி அருகே ஜமாத் தலைவருக்கு அரிவாள் வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்
சாயல்குடி அருகே ஜமாத் தலைவர் அரிவாளால் வெட்டப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி
சாயல்குடி அருகே ஜமாத் தலைவர் அரிவாளால் வெட்டப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடியில் பொதுப்பணித் துறையினருக்குச் சொந்தமான கஞ்சம்பட்டி ஓடையிலிருந்து வந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதில், ஜமாத் தலைவருக்கும், மற்றொரு தரப்புக்குமிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. எனவே, மோதலைத் தடுக்கும் வகையில், வருவாய்த் துறையினர் மதகுகளை அடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த எஸ்.தரைக்குடி கிராமத்தைச் சேர்ந்த திக்குவிஜயன் மகன்கள் செந்தூர்பாண்டியன் (45), உமையவேலாயுதம் (40) மற்றும் தங்கப்பாண்டி (31) ஆகிய மூவரும், ஞாயிற்றுக்கிழமை மாலை தரைக்குடி கிராமத்திலிருந்து சாயல்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜமாத் தலைவர் முகம்மது அபுபக்கரை வழிமறித்து, கை மற்றும் கால்களில் அரிவாளால் வெட்டினர். இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
அதையடுத்து, அபுபக்கருக்கு கடலாடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த முகம்மது அபுபக்கரின் உறவினர்கள், தரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எதிர் தரப்பினர்களுக்குச் சொந்தமான 3 டிப்பர் லாரிகளின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, திங்கள்கிழமை மதியம் சாயல்குடி-விளாத்திகுளம் சாலையில் திரண்ட பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு, ஜமாத் தலைவரை வெட்டிய 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழக்கரை டி.எஸ்.பி. நடராஜன் (பொறுப்பு), கடலாடி வட்டாட்சியர் முத்துலட்சுமி, துணை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.