தமிழக மீனவர்கள் 18 பேர் உள்பட 40 பேரை கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு: விதிமுறைகளை மீறி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டு
கேரள கடல் பகுதியில் விதிமுறைகளை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 18 பேர் உள்பட 40 பேரை, கேரள நாட்டுப் படகு
கேரள கடல் பகுதியில் விதிமுறைகளை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 18 பேர் உள்பட 40 பேரை, கேரள நாட்டுப் படகு மீனவர்கள் சிறைப்பிடித்து, அம்மாநில மீன்வளத் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள தலைத்தோப்பு, கோரவள்ளி, உடையன்வலசை, கண்ணுடையான்வலசை, வெள்ளரி ஓடை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியைச் சேர்ந்த சின்னையா ஆகிய 18 பேர், கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீன்பிடி கூலி தொழிலாளியாகச் சென்றிருந்தனர்.
திங்கள்கிழமை மங்களூரிலிருந்து 4 விசைப்படகுகளில் சென்ற இவர்கள், கேரள மாநிலம் மஞ்சேசுவரம் என்ற இடத்தில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த கேரள நாட்டுப்படகு மீனவர்கள், விதிமுறைகளை மீறி கரையோரத்தில் மீன்பிடித்ததாகக் கூறி, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைப்பிடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் 18 பேரையும் மற்றும் அவர்களது 4 விசைப் படகுகளையும் சிறைப்பிடித்து, கேரள மாநில கடலோரக் காவல் குழும போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, தமிழக மீனவர்களை விடுவிக்க, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டச் செயலர் எம். கருணாமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.