கமுதி ஒன்றியத்தில் மீண்டும் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்
கமுதி ஒன்றியத்தில் 6 கண்மாய்களுக்கு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கியும் 4 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது
கமுதி ஒன்றியத்தில் 6 கண்மாய்களுக்கு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கியும் 4 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது குறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால், மீண்டும் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியத்தில் உள்ள விவசாய பாசனம் பெறும் பொந்தம்புளி, காடமங்குளம், எருமைகுளம், முத்தாதிபுரம், கீழராமநதி, நீராவி உள்ளிட்ட 6 கண்மாய்களுக்கு ரூ. 1 கோடியே 98 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்த 4 மாதமாக பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள விவசாய பாசனம் பெறும் கண்மாய்களை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மராமத்து பணி மேற்கொள்ளாமல், மாவட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் 51 சதவீதத்துக்கு அதிகமான உறுப்பினர்களை கொண்ட பதிவு பெற்ற அந்தந்தப் பகுதி விவசாய சங்கங்களின் மூலம் குடிமராமத்துப் பணிகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக, குடிமராமத்துப் பணிகள் கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கமுதி ஒன்றியத்தில் உள்ள இந்த 6 கண்மாய்களிலும் குடிமராமத்துப் பணிகள் தொங்கப்பட்டுள்ளன. இது, அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.