ராமேசுவரத்தில் பள்ளி மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ராமேசுவரத்தில் துளிர் திறனறிதல் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 10 பள்ளிகளைச் சேர்ந்த 291 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ராமேசுவரத்தில் துளிர் திறனறிதல் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 10 பள்ளிகளைச் சேர்ந்த 291 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டாரப் பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் துளிர் மாத இதழ் இணைந்து, மாநில அளவிலான துளிர் திறனறிதல் போட்டித் தேர்வை நடத்தின. இத்தேர்வில், அரசு உயர்நிலைப் பள்ளி, ராமேசுவரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, விவேகானந்த மேல்நிலைப் பள்ளி. ஹோலி ஐலண்ட் மேல்நிலைப் பள்ளி, பாம்பன் காமராஜர் நடுநிலைப் பள்ளி, சின்னப்பாலம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆகிய 6 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 291 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இத்தேர்வு 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 6, 7, 8 வகுப்பு மாணவர்கள் இளநிலைப் பிரிவு, 9,10 வகுப்பு மாணவர்கள் உயர்நிலைப் பிரிவு, 11, 12 வகுப்பு மாணவர்கள் மேல்நிலைப் பிரிவு என தனித்தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட துளிர் திறனறிதல் தேர்வு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ராமேசுவரம் வட்டாரத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர் ஜெரோம் ஆகியோர் செய்திருந்தனர்.