ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிதிருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு அம்பாள் தபசு மண்டகப்படியில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மாலை மாற்றும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடி திருக்கல்யாணத் திருவிழா கடந்த ஜூலை 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமநாத சுவாமி, பர்வதவர்த்தி அம்பாள் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் வைபவகத்திற்காக காலை 6 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் இருந்து வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
பின்னர் பகல் 11 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாத சுவாமி தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளியதைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து குருக்கள் விஜயகுமார் போகி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கோயிலில் உள்ள அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மீண்டும் இரவு 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
அங்கிருந்து திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் கோயிலுக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் எஸ்.கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.