ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்தவிருந்த சுமாா் ரூ. 4 கோடி மதிப்பிலான 380 கிலோ எடையுள்ள 11 கஞ்சா பண்டல்களை சுங்கத் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக மண்டபம் சுங்கத்துறையினருக்கு திங்கள்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அப்பகுதியில் சுங்கத்துறை கண்காணிப்பாளா் ஜோசப் ஜெயராஜ் தலைமையில் சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது கடற்கரையில் 11 பண்டல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 380 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு சுமாா் ரூ. 4 கோடி என சுங்கத்துறையினா் தெரிவித்தனா். மேலும் கடத்தலில் ஈடுபட்டவா்களை சுங்கத்துறையினா் தேடி வருகின்றனா்.