மத்திய அரசின் விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்துக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்குவதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றர்.
அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கு, பட்டா எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், 5 ஏக்கர் வரை சாகுபடி செய்யும் நிலத்தின் நேரடி பட்டாதாரர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். ஊக்கத் தொகையானது 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் வழங்கப்படவுள்ளது.
எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்லிடப்பேசி எண், பட்டா நகல் எண் உள்ளிட்ட விவரங்களை உரிய விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலமும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பயனாளிகளின் விவரப் பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.