பயிர்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக் கோரி ஆர்.எஸ்.மங்களம் தாலுகா செங்குடி பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே பருவமழை பொய்த்து வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ள நிலையில் காப்பீட்டுத் தொகை முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், 2016 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை குறிப்பிட்ட பகுதிகளில் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் செங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு 2016-17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை 25 சதவிகிதமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதியை விரைவில் வழங்க வேண்டும். மேலும், 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக விரைவில் வழங்க வேண்டும் எனக் கோரி கிராமத் தலைவர் அருள்சூசை தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரியிடம் மனு அளித்தனர்.