தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியவருக்கு திருவாடானை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பனிதவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (34). இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜேம்ஸ் ( 40). இவர்கள் இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் கட்டையால் தாக்கப்பட்டதில் கவிதாவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. 2010 இல் நடந்த இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஜேம்ஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி பாலமுருகன் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.