ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காவல் நிலைய, புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழக்கரையில் காவல் நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கு ஏர்வாடி செல்லும் வழியில், இசிஆர் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1,914 சதுர அடியில் தரைத்தளம், முதல் தளமாக கட்டடம் கட்டப்படவுள்ளது. கட்டடத்துக்கு ரூ.1.12 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, துணைக் கண்காணிப்பாளர் (கீழக்கரை) முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய கட்டடம் இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும், அடுத்தாண்டு முதல் புதிய கட்டடத்தில் காவல் நிலையம் செயல்படும் என்றும் காவல்துறை வீடு கட்டும் பிரிவு பொறியாளர்கள் தெரிவித்தனர்.