கமுதி அருகே 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால், சாலையோர தரைதள தொட்டியிலிருந்து ஒரு குடம் தண்ணீரை சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சேகரித்து வருகின்றனர்.
கமுதி - சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தோப்படைபட்டியில் 820-க்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி குடிநீர் மட்டுமே. இங்கு 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால், தண்ணீர் லாரிகளை எதிர்நோக்கி காலி குடங்களுடன் காத்திருக்கும் அவலம் உள்ளது. தற்போது குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், தண்ணீர் லாரிகள் தோப்படைபட்டி கிராமத்தில் நிற்பதில்லை. இதனால் தோப்படைபட்டி கிராம மக்கள் 2 கிமீ., தூரம் பயணித்து, சாலையோரத்தில் உள்ள தரைதள தொட்டியில் 3 மணி நேரம் காத்திருந்து, சிறு டப்பாக்களில் தண்ணீரை சேகரித்து, வடிகட்டி, 1 குடம் தண்ணீருக்காக, குடும்பம் குடும்பமாக, தள்ளுவண்டிகளுடன் காத்திருந்து தண்ணீரை சேகரித்து வருகின்றனர்.
சாலையோரத்தில் செல்லும் குழாயில் குடிநீர் விநியோகம் உள்ள போதிலும், கிராமத்திற்கு மட்டும் 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லாதது, கிராம மக்களை கவலையடைய செய்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தோப்படைபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களிலும் காவிரி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.