ராமேசுவரத்திலிருந்து துபை நாட்டுக்குச் சென்று துன்புற்றுவரும் 2 இளைஞர்களை மீட்கக்கோரி அவர்களது குடும்பத்தினர் திங்கள்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமேசுவரத்தைச் சேர்ந்தவர்கள் ராம்குமார் (26), கணேசன் (28). இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்தவர் மூலம் துபை சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உறுதியளித்தபடி சரியான வேலை வழங்கப்படவில்லை. மேலும் ஊதியமும் சரியாக வழங்கப்படவில்லையாம். இந்தநிலையில், உணவு, தங்குமிடம் சரியாக வழங்காமல் தங்களை வேலை வாங்கும் நிறுவனத்தினர் கொடுமைப்படுத்துவதாக இருவரும் கட்செவியஞ்சல் மூலம் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கணேசனின் தாய் இந்திரா, ராம்குமாரின் தாயார் பேபி அம்மாள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவைச் சந்தித்து மனு அளித்தனர். இளைஞர்களை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.