திருவாடானை அருகே இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டதால் கோயில் திருவிழா நடத்த அதிகாரிகள் தடை விதித்தனர்.
திருவாடானை அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரி வசூல் செய்து திருவிழா நடத்துவது சம்பந்தமாக இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சேகர் தலைமையில் புதன்கிழமை மாலை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் இரு பிரிவினரும் கலந்து கொண்டனர். வரி வசூல் செய்யும்போது யாரையும் புறக்கணிக்காமல் அனைவரிடமும் வசூல் செய்து ஒற்றுமையாக திருவிழா நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. சமரச உடன்பாடு ஏற்படாத நிலையில் கிராம மக்கள் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிடலாம். திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.