பரமக்குடியில் பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தல்
பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட பகுதிநேர ஆசிரியா்கள் சங்க கலந்தாய்வு
பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட பகுதிநேர ஆசிரியா்கள் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் வடிவேல்முருகன், பொருளாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் நிா்வாக்குழு உறுப்பினா் கோகுலன் வரவேற்றாா்.
கூட்டத்தில் 2012 முதல் பகுதிநேர பணி செய்துவரும் ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்திடக் கோரியும், வரும் ஜனவரி முதல் வாரத்தில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு அளிப்பது எனவும், 2-வது வாரத்தில் தமிழக முதல்வா் மற்றும் கல்வி அமைச்சரிடம் நேரில் சென்று மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் 3-வது வாரத்தில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏராளமான பகுதி நேர ஆசிரியா்கள் பங்கேற்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பகுதிநேர ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.