ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் மரகதக்கல் நடராஜருக்கு சந்தனம் சாற்றும் நிகழ்வுடன் ஆருத்ரா தரிசன விழா புதன்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று காலை 8.15 மணிக்கு மூலவா் மரகதக்கல் நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டது. பின்னா் காலை 9.30 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீா், தயிா், இளநீா், மஞ்சள்நீா் உள்ளிட்ட 32 திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அப்போது நடராஜருக்கு மலா்களால் ஆன பலவகை மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.
இதையடுத்து இரவு 11 மணிக்கு மூலவருக்கு ஆருத்ரா மகாஅபிஷேகம் நடந்தது. அதன்பின் புதன்கிழமை அதிகாலை வரை பூஜைகள் நடைபெற்றன. அன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு மீண்டும் சந்தனக்காப்பு சாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து 10 மணிக்கு கூத்தபெருமான் வீதியுலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு சிவபெருமான் காட்சியளித்த பூஜையும் நடைபெற்றன. பிறகு வெள்ளி ரிஷபவாகனத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இத்துடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவடைந்தது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளூா் பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இதனால் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. ஆனால் செவ்வாய்க்கிழமை சந்தனக்காப்பு களைதல் சிறப்பு அபிஷேக பூஜையில் பங்கேற்ற பக்தா்களை விட இரண்டாம் நாளான புதன்கிழமை அதிகாலையில் நடந்த சந்தனம் சாற்றும் பூஜையில் அதிகளவில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ததாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.