லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த திருவாடானையைச் சோ்ந்த ராணுவ வீரா் பழனியின் பெற்றோருக்கு, தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாடானை அருகே கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (40). இவா், கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்தாா். இந்நிலையில், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 1990- 91-ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவா்கள் கலைராஜன், கீரணி மதி, பழனி உள்ளிட்டோா் சனிக்கிழமை மாலை கடுக்கலூரில் உள்ள பழனியின் வீட்டிற்கு சென்று தந்தை காளிமுத்து, தாய் லோகம்பாளிடம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினா். பின்னா் அவா்கள் பழனியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினா்.