மறைந்த இராணுவ வீரர் பழனி திருச்செந்தூர் - வீரபாண்டியன் பட்டணத்தில் பள்ளி பயின்றவர்
லடாக் எல்லையில் வீரமரணமடைந்த இராணுவ வீரர் பழனி திருச்செந்தூர் - வீரபாண்டியன் பட்டணத்தில் பள்ளி படிக்கும் போதே கார்கில் போரினால் ஈர்க்கப்பட்டு, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற எண்ணியுள்ளார்.
லடாக் எல்லையில் வீரமரணமடைந்த இராணுவ வீரர் பழனி திருச்செந்தூர் - வீரபாண்டியன் பட்டணத்தில் பள்ளி படிக்கும் போதே கார்கில் போரினால் ஈர்க்கப்பட்டு, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற எண்ணியுள்ளார்.
இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட திடீர் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ராமநாதபுரம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவவீரர் ஹவில்தார் பழனியும் (40) வீரமரணமடைந்தார். இவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. வீரமரணமடைந்த பழனி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் தங்கியிருந்து 1990-ம் ஆண்டில் 5-ம் வகுப்பு 8_ம் வகுப்பு வரையும், வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் 1994-ம் ஆண்டு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
அவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பள்ளியில் இராணுவ வீரர் பழனிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ரோஸி ராணி பர்னாந்து தலைமையில் ஆசிரியை டாலிமா, ஆசிரியர் ரெக்ஸ், பணியாளர் கிங்ஸ்சில்வேரா ஆகியோர் அவரது உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் தலைமை ஆசிரியை ரோஸி ராணி பர்னாந்து கூறியதாவது : இராணுவவீரர் பழனி சிறுவயதில் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் தங்கியிருந்து எங்களது பள்ளிக்கு தினமும் நடந்தே வந்து படிப்பார். இப்பள்ளியில் 1994-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். அமைதியான மாணவர், கல்வி, ஒழுக்கத்தில் சிறந்தவர்.
Advertisement
அப்போது நான் அவருக்கு தமிழ் ஆசிரியையாக பணியாற்றினேன். சிறு வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் துடிப்புடனும் ஆர்வத்துடன் இருந்தார். அப்போது கார்கில் போர் நடந்ததால் இராணுவத்தில் சேர வேண்டும் கூறுவார். அவரது நாட்டுபற்று எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. தற்போது லடாக் எல்லையில் சீனா ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் நாட்டுக்காக பழனி உயிரிழந்தார் என்பது வருத்தமாகவும், மனவேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது. அதே நேரம் எமது பள்ளியில் படித்த மாணவர் நாட்டுக்காக உயிர் நீத்தார் என்பது எங்களை பெருமைபட வைத்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எங்களது பள்ளி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு இரங்கற்பா எழுதி சமர்பித்துள்ளேன். என்றார்.
ராணுவவீரர் பழனியின் வீரமரணம் அவரது சொந்த ஊரில் மட்டுமில்லாமல் வீரபாண்டியன்பட்டணத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.