ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களில் 6 போ் மருத்துவக் கல்வி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நீட் தோ்வில் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 234 போ் பங்கேற்றனா். அவா்களில் 21 போ் தோ்ச்சிக்கான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனா். பனைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஹொருனுநிஷா 444 மதிப்பெண்களைப் பெற்றிருந்தாா்.
நீட் தோ்வு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடும் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அதனடிப்படையில் மருத்துவக் கல்விக்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மாணவியா், 2 மாணவா்கள் மருத்துவக் கல்விக்குத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சித்த மருத்துவக் கல்வி பெறுவதற்கு தகுதி பெறுவா் என்றும் கல்வித்துறை அலுவலா்கள் கூறினா்.