சிலிண்டர் தட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கிறது: மாநிலங்களவையில் கார்கே பேச்சு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பற்றி...
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
இன்றைய மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
"நாட்டில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினர், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்களைப் பாதித்து வருகிறது.
தற்போதைய சூழலில், எல்பிஜி கிடைப்பதும், அதன் விலை நிலைத்தன்மையும் தீவிரமான பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன. ஏனெனில் சில பகுதிகளில் அதிகமாக விலை கொடுத்து மக்கள் சிலிண்டர் வாங்குகின்றனர். இதனால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.
மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், எல்பிஜி சிலிண்டருக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் கள நிலவரமோ அரசின் கூற்றுகளைத் தவறு என்றே நிரூபிக்கிறது" என்றார்.
இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, "இது பூஜ்ய நேரம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அறிந்திருக்க வேண்டும்; இதில் ஒருவர் 3 நிமிடங்களுக்குள் தனது பேச்சை நிறைவு செய்ய வேண்டும். இவ்விதிமுறை அனைவருக்கும் பொருந்தும்" என்று கூறினார். மேலும் நாட்டில் அமைதியை விரும்பும் மக்களை காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.