வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
சிஜேபி போராட்டத்தில் தடியடி நடத்தியதற்கு கார்கே கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ள சூழலில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி செல்ல சிஜேபி ஆதரவாளர்கள் முயற்சித்தனர்.
Advertisement
Advertisement
தடுப்புகளை மீறி பேரணி செல்ல முயற்சித்தவர்களை தடியடி நடத்தி தில்லி காவல்துறையினர் கலைத்தனர். மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே குரல் எழுப்பியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் பேசியதாவது:
”வினாத்தாள் கசிவு மற்றும் நீட் தேர்வு முறைகேடு குறித்த எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது மாணவர் நலன் சார்ந்த ஒரு விவகாரம். லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நான் பேசுகிறேன்.
ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடியுள்ளனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. வன்முறையைப் பயன்படுத்தி, அவர்களின் குரல்களை ஒடுக்கவும், அங்கிருந்து விரட்டியடிக்கவும் அரசு முயற்சிக்கிறது” என கண்டனம் தெரிவித்தார்.
Attempt to suppress students' voices through violence! Kharge condemns in the Rajya Sabha!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.