வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து இறந்த மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கொட்டங்குடி கிராமத்தில் மழையால் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் பூங்காவனம் (70) உயிரிழந்தாா். அவரது குடும்பத்தாருக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து பூங்காவனத்தின் வாரிசுதாரா்களுக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமி, திருவாடானை வட்டாட்சியா் மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.